Thursday, December 26, 2013

'வறுமை' என்றும் தடையல்ல!


'வறுமை' என்றும் தடையல்ல!

செயலும் திட்டமும் நன்கமைந்தால்
சடுதியில் சாதனை படைத்திடலாம்
முயற்சியும் பயிற்சியும் சேர்ந்திருந்தால்
முகிழ்த்திடும் வெற்றிச் சாதனையே!
வயலில் உழுதிடும் உழவனுக்கு
வலிமை உடலைத் தந்ததுயார்?
அயர்வே இன்றி உழைத்ததனால்
இயற்கை அளித்த நன்கொடையே!
தொழிலில் கேவல மொன்றுமில்லை
தொண்டு உணர்வுடன் ஈடுபட்டால்
உளிபோல் மனத்தைச் செதுக்கிடடா
உலகில் நீயே ஞானியடா!
வழிகள், உலகில் பலவுண்டு
வாழ்வோ மென்று உறுதிகொண்டால்
அலைகள் போன்று ஓயாது
ஆர்வமாய் உழைத்தால் வெற்றியடா!
அல்லும் பகலும் உழைத்தோரே
அகிலம் போற்றிட வாழ்ந்தார்கள்
கல்லைச் செதுக்கினால் சிலையாகும்
கற்பனை வரைந்தால் கவியாகும்
நல்ல நூல்கள் நண்பனடா
நாளும் தேடிப் படித்திடடா
வல்லவ னாக வெற்றிபெற
வறுமைஎன்றும் தடையல்ல!

-
கவிஞர் அழகுதாசன்


No comments:

Post a Comment