Saturday, December 14, 2013

தோல்விக்கான விதிகள்...



‘பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’ - என்ன இது, தலைப்பே தடாலடியாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? கோகோ - கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய இந்த புத்தகம் தான் இன்றைக் ஹாட் கேக்காக விற்பனையாகிறது.

“மாறுதல் நிறைந்த பிஸினஸ் உலகில் வெற்றி பெறத்தான் புதுப்புது விதிகளும் வழிகளும் தேவை. ஆனால் அவற்றை வரையறை செய்வது கடினம். இன்று சரியென்று தெரியும் பாதை, நாளை தவறானதாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம். 

ஆனால், ஏற்கனவே தோல்வியைத் தழுவிய, இனி தழுவப்போகும் அனைத்து பிஸினஸ்களும் எதைச் செய்ததால் / செய்தால் தோல்வியை உறுதியாகத் தழுவலாம் என்று பட்டியலிட்டால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பத்தே விதிகள் தான் மிஞ்சும். 

இந்த விதிகளைத் தவிர்த்தாலே நீங்கள் வெற்றிக்கு வழி கண்டுவிடுவீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், இவற்றைப் பின்தொடர்ந்தால் தோல்வி நிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.

வாழ்நாள் முழுக்க அவர் பெற்ற அனுபவத்தை சாறுபிழிந்து, பிஸினஸ் மேனேஜர்களுக்கும் சி.இ.ஓ. களுக்கும் 10 விதிகளாகச் சொல்கிறார்.

1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.
2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்
3. மேனேஜரோ/சி.இ.ஓ.வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.
4. நான் தவறே செய்யமாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.
5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.
7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.
8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.
9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.
10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல்படுங்கள்.

இந்த விதிகளை விதிகளாக மட்டும் சொல்லாமல் அவருடைய நேரடியான சொந்த அனுபவங்களிலிருந்து பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டியும், அவருடைய கேள்வி ஞானத்திலிருந்து பல்வேறு முன்னனி நிறுவனங்களில் நடந்த சில நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டியும் எழுதியுள்ளார். 

உதாரணத்திற்கு, உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல் பழகாமல் தனிமையில் வாழுங்கள் என்ற விதியை ஃபாலோ செய்வது மிகவும் சுலபமானது என்று அடித்துச் சொல்கின்றார் அவர். உங்களின் கீழ் வேலை பார்ப்பவர்களை உங்களுக்குத் தொல்லை தருபவர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் உங்களிடம் வந்து அதில் பிரச்னை இதில் மாற்றம் தேவை என்று நச்சரித்து உங்கள் நேரத்தை வீணடிப்பார்கள். உங்கள் நேரம் எவ்வளவு பொன்னானதுÐ எனவே, ஒருவரையும் உங்களை அண்டவிடாமல் வாழப் பழகுங்கள்.

கூட இருக்கின்றவர்கள் பேரைக்கூட தெரிந்து கொள்ளாதீர்கள். பேரைத் தெரிந்து வைத்து என்ன பிரயோஜனம்? ஒருநாள் அந்த நபர் உங்கள் நிறுவனத்திலிருந்து வேலையைவிட்டு போய்விடுவார். பெயரைத் தெரிந்து வைத்துக்கொள்ள நீங்கள் செலவிட்ட நேரம் வேஸ்ட்தானேÐ என்று சுவாரஸ்யமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார். 

இன்னமும் மேலேபோய் உங்கள் ஆபீஸில் போட்டோகாப்பியர் எங்கே இருக்கின்றது என்பதைக்கூட தெரிந்து கொள்ளாதீர்கள். அப்போதுதான் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவ முடியும் என்பது அவர் செய்யும் உச்சகட்ட கேலி. இப்படிச் செய்துவீட்டீர்கள் என்றால் உங்களை நாடி வருபவர்கள் எல்லோரும் நல்ல செய்தியை மட்டுமே கொண்டுவருவார்கள். இதையும் தாண்டி கெட்ட செய்திகளை தப்பித்தவறி யாரும் கொண்டுவந்து விட வாய்ப்புள்ளது. அதனால், எல்லோர் மனதிலும் பயத்தை உண்டு பண்ணுவதுபோல் நடந்து கொள்ளுங்கள். 

யாரும் உங்களை அண்ட மாட்டார்கள் என்கிறார். 
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கும் இந்த புத்தகத்துக்கு வாரன் பஃபெட் முன்னுரை எழுத, பில்கேட்ஸ், ஜாக் வெல்ச், ரூபர்ட் முர்டாக் போன்ற பிஸினஸ் ஜாம்பவான்கள் இந்த புத்தகத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தொழில் முனைவோர்களும், மேனேஜர்களும் வருடம் ஒரு முறையாவது படித்து தங்கள் செயல்பாடுகளில் இந்த விதிகள் தப்பித்தவறி ஒட்டிக்கொண்டுள்ளதா என்று பார்ப்பது அவசியம்.

No comments:

Post a Comment